தமிழ் மொழியில் மட்டும் தான் நடிப்பேன்.. தேமுதிக மாநாட்டில் விஜயகாந்தால் நெகிழ்ந்த ரோபா சங்கர் மகள்.

கடலூர்: வரும் சட்டசபை தேர்தலையொட்டி கடலூர் மாவட்டம் வேப்பூரில் தேமுதிக சார்பில் ‛மக்கள் உரிமை மீட்பு மாநாடு‘ நடந்து வருகிறது. இந்த மாநாட்டில், மறைந்த நடிகர் ரோபா சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் பங்கேற்று பேசினார். அப்போது, ‛‛நடித்தால் தமிழில் மட்டும் தான் நடிப்பேன். பிற மொழிகளில் நடிக்கமாட்டேன். தெலுங்கு, மலையாளத்தில் நடிக்க மாட்டேன் என்று தமிழில் மட்டுமே நடித்தவர் தான் நம் கேப்டன்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.
தமிழகத்தில், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கட்சியை பலப்படுத்தும் பணியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தான் கடலூர் மாவட்டம் வேப்பூரில்பாசார் கைக்காட்டி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0′ என்ற.பெயரில் மாநாடு தொடங்கி நடந்து வருகிறது. பிரேமலதா விஜயகாந்த் கட்சி கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார். இந்நிலையில் தான் தேமுதிக மாநாட்டில் நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் பேசினார். அப்போது அவர், ‛‛இப்போது நான் இங்கு ஒரு பெயரை சொல்லப்போகிறேன். அரங்கம் மட்டுமில்லை. ஆகாயம் கூட அதிரும். அவர் வெறும் நடிகர் அல்ல. புரட்சி கலைஞர். அவர் வெறும் அரசியல்வாதி இல்லை கருப்பு எம்ஜிஆர். அவர் வெறும் மனிதர் இல்லை. கோடம்பாக்கத்தில் பசியோடு வரும் பலரின் பசியையாற்றும் எங்கள் சாமி. அவர் தான் நம்ம கேப்டன் விஜயகாந்த்.
விஜயகாந்தின் ரத்தத்தின் ரத்தங்கள் அனைவருக்கும் வணக்கம். சினிமாவில் வெள்ளை தோலும், கலை வாரிசாகவும் இருந்தால் மட்டுமே உள்ளே வர முடியும் என்பதை உடைத்து சாதித்தவர் விஜயகாந்த். சினிமாவில் அவர் வந்தபோது அவரை சூப்பர் ஹீரோவாகவோ அல்லது வேறு ஒரு ஆளாகவோ பார்க்கவில்லை. நம்ம வீட்டில் ஒருவராக அண்ணனாக, தம்பியாக , உறவாக மட்டும் தான் பார்த்தனர்.
அப்படி பார்த்த மக்களை அவர் சும்மா விடுவாரா? எந்த நடிகர்களுக்கும் இல்லாத 60 ஆயிரம் ரசிகர் மன்றம் அமைத்து மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் வழங்கியவர். சினிமாவை ஜனநாயகப்படுத்திவயர் விஜயகாந்த் தான். சினிமா செட்டில் ஹீரோவிற்கு ஒரு சாப்பாடு. லைட்மேனுக்கு ஒரு சாப்பாடு என்ற பாகுபாட்டை உடைத்தவர் விஜயகாந்த். யார் என்ன சாப்பிடுகிறேனோ? அதுதான் கடைநிலை ஊழியருக்கும் செல்ல வேண்டும் என்று கூறியவர் விஜயகாந்த். அரசியலில் அன்னதானம் செய்தால் அது ஓட்டுக்கு மட்டும் தான். ஆனால் சினிமாவில் லைட்மேன் முதல் டைரக்டர், ரசிகர்கள் வரை அலுவலகத்தில் சாப்பாடு போட்டாரே அதுதான் மனிதாபிமானம். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கடனில் இருந்து மீட்ட கர்மவீரர்.அதுவும் இல்லாமல் நலிந்த கலைஞர்களுக்கு பென்ஷன் திட்டம் உருவாக்கியவர் விஜயகாந்த். விஜயகாந்திடம் இன்னொரு சிறப்பான விஷயம் என்னவென்றால் நடித்தால் தமிழில் மட்டும் தான் நடிப்பேன். பிற மொழிகளில் நடிக்கமாட்டேன். தெலுங்கு, மலையாளத்தில் நடிக்க மாட்டேன் என்று தமிழில் மட்டுமே நடித்தவர் தான் நம் கேப்டன்” என்றார்.

