129 பேருக்கு பரிந்துரை; 93 பேர் நீதிபதியாக நியமனம்: சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் பரிந்துரை வெளியீடு

0 7

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக கவாய் பணியாற்றிய காலத்தில், நீதிபதியாக நியமிப்பதற்கு செய்யப்பட்ட பரிந்துரைகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றும் கவாய், நாளை (23ம் தேதி) ஓய்வு பெறுகிறார். புதிய தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பொறுப்பேற்கிறார்.தலைமை நீதிபதியாக கவாய் மே 14ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அன்று முதல், இப்போது வரையிலான காலத்தில் செய்யப்பட்ட ஐகோர்ட் நீதிபதிகள் பணி நியமனம் பற்றிய கொலீஜியம் பரிந்துரை பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

மொத்தம் 129 பேருடைய பெயர்களை ஐகோர்ட் நீதிபதியாக நியமிப்பதற்கு பரிந்துரைத்து, கவாய் தலைமையிலான கொலீஜியம் (மூத்த நீதிபதிகள் குழு) மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.

அவர்களில் 93 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள். 10 பேர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள். 13 பேர் சிறுபான்மையினர். மொத்த பட்டியலில் இடம் பெற்றுள்ள பெண்கள் எண்ணிக்கை 15 ஆகும்.நியமனம் செய்யப்பட்டவர்களில் 5 பேர், பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகளின் உறவினர் என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இருந்தபோதுதான், கொலீஜியம் பரிந்துரைகளை வெளிப்படையாக அறிவிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.