பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலை போட்டிகளை பார்வையிட்டு பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் கடந்த 27-10-2025 முதல் 30-10-2025 வரை பத்து பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலுகின்ற அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தங்களின் கலைத்திறமைகளை வெளிப்படுத்தினர். ஓவியம், வண்ணசித்திரங்கள் வரைதல், களிமண் சிற்பம், மணல் சிற்பம், ரங்கோலி, நாட்டுப்புற நடனம், பரத நாட்டியம், இலக்கிய நாடகம், வீதி நாடகம், தெருக்கூத்து மற்றும் இசைக்கருவிகள் இசைத்தல் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இன்று 29.10.2025 திருச்சிராப்பள்ளி காஜாமியான் மேல்நிலைப்பள்ளியில் 9- வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வருகை தந்து கலை போட்டிகளை பார்வையிட்டு பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து உற்சாகப்படுத்தி சிறப்பித்தார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி. கோ.கிருஷ்ணபிரியா அவர்கள் மற்றும் மாவட்ட கல்விச்சார் அலுவலர்கள் அனைவரும் பங்கேற்று போட்டிகளை வழி நடத்தினர்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் முழுவதுமாக 3927 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் நவம்பர் மாதம் இறுதியில் மாநில அளவிலான நடக்கும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மாநில அளவிலான போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவ. மாணவியர்கள் கலந்து கொண்டு 60-க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

