விஜய் பேச்சில் இருந்தது வீரியமா? காரியமா? பேசியது சரியா? இது நல்ல முறையா? : இங்கு எழுதுங்கள் வாசகர்களே…
கட்சி துவங்கி 2 ஆண்டுகளில் இரண்டு மாநில மாநாடுகளை நடத்தி முடித்துள்ளார் நடிகர் விஜய். நேற்று மதுரையில் நடந்த மாநாட்டுக்கு 3 லட்சம் பேர் வந்திருக்கலாம் என்று உளவுத்துறை தமிழக அரசுக்கு அறிக்கை அளித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் 4 லட்சம் பேர் வரை வந்திருக்கலாம் என்று பொதுமக்கள் தரப்பில் பேசப்படுகிறது. தானாக சேர்ந்ததாக கூறப்படும் இந்த கூட்டம், ஓட்டாக மாறுமா என்பது இப்போதைக்கு தெரியாது. ஆனால், விஜய் பின்னால் அணிவகுக்க இளைஞர்களின் ஒரு பகுதி தயாராவதையே இது காட்டுகிறது.
ஆனால் மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு எந்த அளவிற்கு பொது மக்களிடம் எடுபட்டது என்பது அந்த பொது மக்களுக்கே வெளிச்சம்.
திராவிட கட்சி தலைவர்களின் நீண்ட நெடிய அடுக்குமொழி வசனங்களையும், வார்த்தை ஜாலங்களையும் கேட்டு பழகிய தமிழக மக்களுக்கு விஜய் பேச்சு கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்திருக்கும். அவரது பேச்சுக்கு வரவேற்பும் இருக்கிறது பல மாதிரியான விமர்சனங்களும் இருக்கின்றன.
அவரது பேச்சில் கொள்கை இல்லை, கோட்பாடு இல்லை என்று ஒருசாராரும், திட்டங்கள் இல்லை, செயலாக்கம் இல்லை என்று ஒருசாராரும், தனது பலம் தெரியாமல் எப்படி இவரால் தொடர்ந்து மற்ற கட்சிகளுக்கு போட்டியை தரமுடியும் என்று ஒருசாராரும், விஜய் பேச்சு எளிமையாக, எதார்த்தமாக இருந்தது, வார்த்தை ஜாலம் எங்களுக்கு தேவையில்லை என்று ஒருசாராரும் சமூக வலைதளங்களில் பேசிக்கொள்கின்றனர்.
விஜய் பேச்சு பற்றி தினமலர் இணையதளத்தில் வாசகர்களாகிய நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை நடுநிலையாக கருத்துகளை பதிவிடுங்கள்.

