தென்னிந்தியாவை நோக்கி நகரும் காற்று மாசுபாடு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

0 7

புதுடில்லி: ‘‘வட இந்தியாவை அச்சுறுத்தும் காற்று மாசுபாடு, நாட்கள் செல்லச் செல்ல தென்னிந்தியாவை நோக்கி நகர்கிறது. இதனால் தென் மாநிலங்களிலும் காற்றின் தரம் குறைந்து வருவகிறது” என ஆய்வுகள் தகவல் தெரிவிக்கின்றன.

வட இந்தியாவில் காற்றின் தரம் குறைந்து வருவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். டில்லியில் இதன் பாதிப்பு மிகவும் அதிகம். இதற்கு தீர்வு காண, அவ்வப்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது, பழைய வாகனங்களை தடை செய்வது, எரிவாயு மூலம் வாகனங்கள் இயக்குவதை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
தற்போது ஆய்வில், வட இந்தியாவில் இருந்து நச்சுக் காற்று நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் பயணித்து தென் இந்தியாவிலும் பாதிப்பை உருவாக்குகிறது என தெரியவந்தது.

இது குறித்து சென்னை ஐஐடி, எஸ் ஆர் எம் பல்கலை ஆகியவற்றுடன் இணைந்து கேரள கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர் சலீம் அலி 3 ஆண்டுகளாக நடத்திய ஆய்வு குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஆய்வுகள் குறித்த தகவல்கள் வளிமண்டல வேதியியல் மற்றும் இயற்பியல் இதழில் வெளியிடப்பட்டு உள்ளன.

பூமியின் மேற்பரப்பில் இருந்து 1 முதல் 3 கிலோ மீட்டர் உயரத்தில் தூசித் துகள்கள் நிலைத்திருப்பது வெப்பநிலையை கிட்டத்தட்ட 2 டிகிரி உயர்த்துகிறது. காற்றின் மாசுபாடு 60 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் கேரளா மற்றும் தமிழகத்தில் பெரும் சுற்றுச்சூழல் சவால் உருவாகியுள்ளது.

மாசுபட்ட காற்றை சுவாசிப்பவர்களுக்கு சுவாசக் கோளாறு பிரச்சனைகள் உருவாகும் வாய்ப்புள்ளது.

தொடர் ஆய்வுகள்

கேரளாவின் வளிமண்டலம் மற்றும் புவியியலில் இந்த மாசுபாட்டின் தாக்கத்தை அறிய தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக டாக்டர் சலீம் அலி குறிப்பிட்டார். இந்த ஆராய்ச்சிக்கு சென்னை ஐஐடி பேராசிரியர் சந்தன் சாரங்கி மற்றும் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பேராசிரியர் சஞ்சய்குமார் மேத்தா தலைமை தாங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.