புதுச்சேரி கல்வித் துறையின் முடிவு : அரசு பள்ளி மாணவியர்க்கு இனி சுடிதாருக்கு மேல் ஓவர்கோட் அணிய கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

0 4

புதுச்சேரி:
புதுச்சேரி அரசு பள்ளி மாணவியர் ரிச் லுக்கிற்காக சீருடையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனி சுடிதாருக்கு மேல் ஓவர்கோட் அணிய கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி அரசு பள்ளிகளில் 90 ஆயிரம் மாணவர்கள் நான்கு பிராந்தியங்களில் படித்து வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடைய திட்டம் உள்ளது.

ஆண்டிற்கு 2 செட் இலவச சீருடையை, மாணவர்களுக்கு அரசு வழங்கி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு அரசு மாணவர்கள் நேவி நீலத்தில் கால் சட்டையும், ஒயிட் பின்னணியில் நீல நிற நெடுங்கோடு போட்ட மேல் சட்டை அணிகின்றனர். ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்கள் இதே கலரில் கால் சட்டைக்கு பதில் சீருடையில் பேண்ட் அணிந்து பள்ளிக்கு வருகின்றனர்.

மாணவியரை பொருத்தவரை, ஐந்தாம் வகுப்பு வரை நேவி நிற பாவாடை சட்டையும், ஒயிட் பின்னணியில் நீல நிற நெடுங்கோடு போட்ட சட்டையும் அணிகின்றனர். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 அரசு பள்ளி மாணவிகள் நேவி நீல நிறத்தில் சுடிதார் பேண்ட், துப்பட்டா, மற்றும் ஒயிட் பின்னணியில் நீல நிற நெடுங்கோடு போட்ட டாப்ஸ் அணிந்து பள்ளிக்கு செல்கின்றனர்.

இதில் புதிய மாற்றத்தினை பள்ளி கல்வித் துறை தற்போது புகுத்தியுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் அரசு பள்ளி மாணவிகள் இனி துப்பட்டாவிற்கு பதில் ஓவர் கோட் அணிய வேண்டும் என, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டு அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளது.

அந்த உத்தரவில், அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு சுடிதார் மேல் ஓவர்கோட் அணிய வேண்டும். இதற்கான வடிவமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கண்காணிப்பு அதிகாரிகள் பள்ளி தோறும் சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து வடிவமைப்பை காண்பித்து ஓர்கோட் தைக்க அறிவுறுத்த வேண்டும் என, உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ன காரணம் தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவியர் சுடிதார் மீது ஒவர்கோட் அணியும் முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இது மாணவியருக்கு பலவகைகளில் சவுகரியமாக உள்ளது. இதனை பின்பற்றி புதுச்சேரியிலும் சீருடையில் மாற்றம் கொண்டுவர கடந்த 2013ம் ஆண்டு கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வந்தது. ஆனால் அதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் சமூக அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் சீருடை மாற்றம் கைவிடப்பட்டது.

அதே நேரத்தில் புதுச்சேரியின் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவியர் ஓவர்கோட் அணியும் முறை நடைமுறையில் உள்ளது. எனவே, ஓவர்கோட் சீருடை அரசு பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என, கருதி பள்ளி கல்வித் துறையும் ஒரு வழியாக சீருடையில் ஓவர் கோட் நடைமுறையை புகுத்தி உத்தரவிட்டுள்ளது.

பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், சுடிதார் துப்பாட்டாவை பொருத்தவரை அரசு பள்ளி மாணவர்களுக்கு பல அசவுரியங்கள் உள்ளன. துப்பட்டாவை பின்குத்தி பின்பக்கமாக விடுதல், அடிக்கடி கீழே விழுதல் என பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதன் காரணமாகவே ஓவர்கோட் நடைமுறையை அமல்படுத்தியுள்ளோம். ஓவர் கோட்டினை எப்படி தைக்க வேண்டும் என, பள்ளி முதல்வர், தலைமையாசிரியர்களிடம் மாடல் தரப்பட்டுள்ளது.

அதன்படி ஓவர் கோட்டினை மாணவிகள் தைத்துக்கொண்டு, பள்ளிக்கு வரலாம். இந்த சீருடைய மாற்றம் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 35 ஆயிரம் மாணவிகளுக்கு அமலுக்கு வருகிறது. இந்த புதிய மாற்றம் மாணவிகளுக்கு ரிச் லுக் கொடுக்கும் என்றனர் புதுச்சேரி கல்வித் துறை, நம்பிக்கையுடன்.

Leave A Reply

Your email address will not be published.