அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் வரும் 15ம் தேதி ஆஜராக அமைச்சர் துரைமுருகனுக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ரூ.1.40 கோடி வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்க்கப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2017ம் ஆண்டு, இந்த வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகனை விடுவித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. இந்த வழக்கில் 6 மாதத்தில் விசாரணையை முடிக்கவும் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான சாந்தகுமாரி, பிடிவாரண்ட்டை திரும்ப பெறக்கோரினார். இதனையடுத்து அவருக்கு எதிரான பிடிவாரண்ட்டை திரும்ப பெற்ற நீதிமன்றம், துரைமுருகனை வரும் 15ம் தேதி ஆஜராக உத்தரவிட்டு உள்ளது.

