மாலத்தீவு அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

மாலே: மாலத்தீவு சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் முகமது முய்சுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அழைப்பின் பேரில், பிரதமர் மோடி அந்நாட்டிற்கு சென்றுள்ளார். மாலேயின் ரிபப்ளிக் சதுக்கத்தில் மோடியை முய்சு வரவேற்றார்.
மோடியுடன் வந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் உள்ளிட்டோரை, மாலத்தீவு அதிபரிடம் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.அவருக்கு 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அந்நாட்டு பாரம்பரியப்படி மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன் பிறகு இரு நாட்டு தலைவர்களும் தனியே பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தரப்பு உறவுகள் , பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது இரு நாட்டு அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
மோடிக்கு கவுரவம்
மேலும், பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில், மாலேயில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம், அவரின் புகைப்படத்தால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

