11ம் வகுப்புக்கு அரசு பொதுத்தேர்வு ரத்து; இந்தாண்டு முதல் அமல்படுத்தப்படும்.

0 4

சென்னை: தமிழகத்தில் 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இந்தாண்டு முதல் ரத்து செய்யப்படுகிறது. புதிய கல்விக்கொள்கை பரிந்துரை அடிப்படையில் இந்த முடிவை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் சார்பில், புதிதாக வடிவமைக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கையை, இன்று (ஆகஸ்ட் 08) முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

எக்காரணம் கொண்டும் யாரும் கல்வியை பாதியில் கைவிடக்கூடாது. அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம் . பள்ளிக் கல்வி வரலாற்றில் இது சிறப்பு விழா. எந்த மாநிலத்திலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படுவதில்லை. இந்த வயதில் என்ஜாயும் பண்ணலாம்; நன்றாக படித்து சாதிக்கவும் செய்யலாம்.

பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் பார்த்தால் புது எனர்ஜி வந்து விடுகிறது. இந்த ஆண்டு 75% மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர் இது 100 சதவீதமாக உயர வேண்டும். அந்த இலக்கை எட்ட உங்களை போல மாணவர்கள் தான் உதவ வேண்டும். நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு போகும் மாணவர்கள் அச்சப்படாதீர்கள்.

காடு எதுவாக இருந்தாலும், சிங்கம் தான் அங்கு ராஜா. அதுமாதிரி எளிய பின்னணியில் இருந்து முயற்சியால் பெரிய உயரத்திற்கு வந்திருக்கும் நீங்கள் தான் ரியல் ஹீரோ. உங்கள் கெத்தை காண்பித்து ஜெயித்து வாருங்கள். உங்களை தூக்கி வைத்து கொண்டாட நாங்களும், இந்த உலகமும் தயாராக இருக்கிறோம்.

தமிழகத்திற்கு என்று தனி சிந்தனை உள்ளது சிந்தித்து செயல்படும் வகையில் கல்வி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி கொள்கை மூலமாக படித்து மனப்பாடம் செய்யும் மாணவர்களை உருவாக்குவதை விட, சிந்தித்து கேள்வி கேட்கும் மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம்.படிக்கிறவர்களாக மட்டும் அல்ல; படைப்பாற்றல் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம்.

கல்வி உடன் உடல்பயிற்சியும் இணைக்கப்படும். தாய்மொழி தமிழ் நமது அடையாளமாக, பெருமிதமாக இருக்க வேண்டும். முக்கியமாக தமிழும், ஆங்கிலமும் எங்களது இருமொழிக் கொள்ளை தான் உறுதியான கொள்கையாக இருக்க வேண்டும். மீண்டும் சொல்கிறேன், இருமொழிக் கொள்கை தான், நம்முடையான உறுதியான கொள்கை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.