பா.ஜ.க. பிரமுகர் தற்கொலை வழக்கில் கட்சி நிர்வாகிகள் 3 பேர் கைது

திருச்சி, ஜூலை 25 மணப்பாறையில் பாஜக பிரமுகர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பாஜக நிர்வாகிகள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை காந்திநகரைச் சேர்ந்தவர் பாண்டியன் (45). பாஜக நகர துணை பொதுச் செயலாளரான இவர் நேற்று அவரது கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக இறந்தவரின் மனைவி ஞானசௌந்தரி மணப்பாறை போலீஸ் நிலையத்தில் தனது கணவர் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியனை தற்கொலைக்கு தூண்டியதாக தீராம்பட்டியைச் சேர்ந்த பாஜக நகரத் தலைவர் கோபாலகிருஷ்ணன் என்ற கோல்டு கோபால் வயது 45, பூவம்பட்டியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் வயது 41, செவலூரைச் சேர்ந்த விஜயராகவன் வயது 44 ஆகிய 3 பேரையும் கைது செய்து மணப்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

