நகைக்கடை மேலாளரை தாக்கி 10 கிலோ நகை கொள்ளை

0 12

திருச்சி அருகே சென்னையைச் சேர்ந்த நகைக்கடை மேலாளரை தாக்கி, 10 கிலோ நகைகளை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடுகின்றனர்.

சென்னை, சவுகார்பேட்டையில் ஆர்.கே., ஜூவல்லரி உள்ளது. இதன் மேலாளர் பிரதீப் ஷாட். இவர், மூன்று பேருடன், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நகைக் கடைகளுக்கு விற்பனைக்காக நகையை காரில் நேற்று முன்தினம் கொண்டு சென்றார். விற்பனை முடித்து மீதியிருந்த, 10 கிலோ நகைகளுடன் இரவு சென்னை திரும்பிக் கொண்டிருந்தார்.

திருச்சி மாவட்டம், சமயபுரம், கீழவங்காரம் பிரிவு சாலை அருகே காரை நிறுத்தி, பிரதீப் ஷாட் உட்பட நான்கு பேரும் இயற்கை உபாதை கழிக்கச் சென்றனர்.

அங்கு காரில் வந்த நான்கு பேர், அவர்களின் முகத்தில் மிளகாய் பொடியை துாவி, கார் கண்ணாடியை உடைத்து இரண்டு பேக்குகளில் இருந்த, 10 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து தப்பினர். கொள்ளையடித்த நகையின் மதிப்பு, 12 கோடி ரூபாய்.

பிரதீப் ஷாட் புகாரில், சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருச்சி எஸ்.பி., செல்வ நாகரத்தினம் தலைமையில், நான்கு தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடுகின்றனர்.

நகைகளை கொள்ளையடித்தவர்கள், திண்டுக்கல்லில் இருந்து பின்தொடர்ந்து வந்து கொள்ளையடித்தனரா அல்லது நகையை கொண்டு வந்தவர்களில் யாருக்கேனும் இதில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.