துபாயிலிருந்து வந்த 2வது எமிரேட்ஸ் விமானத்தில் 364 பயணிகள் சென்னை வந்தனர்

சென்னனை: துபாயிலிருந்து வந்த 2வது எமிரேட்ஸ் விமானத்தில் 364 பயணிகள் சென்னை வந்தனர். கடந்த 3 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் அதிகாலை துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் 217 பேர் சென்னை வந்தனர். அதனைத்தொடர்ந்து, நேற்று காலை துபாயில் இருந்து வந்த 2வது எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் 364 பேர் சென்னை வந்தனர். அவர்களை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
விமானத்தில் வந்த, கடலூரைச் சேர்ந்த ஜனனி என்பவர் கூறுகையில், ‘துபாயில் குண்டுவெடிப்பு சத்தம் ராணுவ போர் விமானங்கள் பறக்கும் சத்தம் ஓயாமல் கேட்கிறது. பொதுமக்கள் இருக்கும் பகுதிகளில் தாக்குதல்கள் எதுவும் இல்லை. துபாய் அரசாங்கம், வெளிநாட்டுப் பயணிகளுக்கு முழு பாதுகாப்பு அளித்து வருகிறது, என்றார்.
சென்னைச் சேர்ந்த பீட்டர் என்பவர் கூறுகையில், துபாயில் பெரிய அளவில் பதற்றம் இல்லை. அங்கு மக்கள் தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் சுற்றுலாவுக்காக கடந்த சனிக்கிழமை தான் துபாய் சென்றோம். எங்களுக்கான அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் துபாய் விமான நிலையத்தில் அதிகாரிகள் செய்து தந்தனர், என்றார்.
சென்னையைச் சேர்ந்த தர்ஷினி என்பவர் கூறுகையில், ‘குண்டு வெடிக்கும் சத்தங்கள், ராணுவ விமானங்கள் பறக்கும் ஓசைகள் தொடர்ந்து கேட்பதால், சற்று அச்சமாகத்தான் இருந்தது. ஆனாலும் நாங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்தோம்’’ என்றார்.

