பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 175 பேரை கொன்ற 26/11 சம்பவத்துக்கு இந்தியா பதிலடி தராமல் இருப்பதற்காக சர்வதேச நாடுகள் நிர்பந்தம் கொடுத்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

0 3

 

 

 

 

 

மும்பையில் அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 175 பேரை கொன்ற 26/11 சம்பவத்துக்கு இந்தியா பதிலடி தராமல் இருப்பதற்காக சர்வதேச நாடுகள் நிர்பந்தம் கொடுத்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு நவ., 26ல் மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 175 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலை அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியது உறுதியானது.

இந்த சம்பவத்திற்கு பிறகு, உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பாகிஸ்தானுக்கு ஏன் பதிலடி கொடுக்கவில்லை என்பது குறித்து தற்போது விளக்கம் அளித்து உள்ளார்.

அவர் கூறியதாவது: 26/11 சம்பவத்துக்கு இந்தியா பதிலடி தராமல் இருப்பதற்காக சர்வதேச நாடுகள் நிர்பந்தம் கொடுத்தன.

அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸா ரைஸ், இந்தியா வந்து பிரதமர் மற்றும் என்னை சந்தித்து போர் தொடங்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

பதிலடி தருவது பற்றி பிரதமர் மற்றும் தொடர்புடைய மற்றவர்களுடன் விவாதித்தேன். இந்த சம்பவம் நடந்து கொண்டு இருந்த போது பிரதமரும் இது பற்றி விவாதித்தார்.

இந்த சம்பவத்துக்கு நேரடியாக பதிலடி தர வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டதில் வெளியுறவு அமைச்சகம் முக்கிய பங்கு வகித்தது. இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்துக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

17 ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் உள்துறை அமைச்சர் சிதம்பரம், நாடு அறிந்ததை ஒப்புக்கொள்கிறார். 26/11 சம்பவம் வெளிநாட்டு சக்திகளின் அழுத்தம் காரணமாக தவறாகக் கையாளப்பட்டது. இந்த பதில் மிகவும் தாமதமானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.